Friday, 27 September 2013

திருமணம்...... அப்போதும் இப்போதும்

என் -

பாட்டிக்கு எட்டு வயது

பல்லுப்போன போதல்ல! வீதியில்

பந்தல் போட்டு ஊரைக்கூட்டிய திருமண நாளில்


என் -

தாத்தாவுக்கு இருபது வயது

தடி ஊன்றிய போதல்ல! அவளுக்குத்

தாலி கட்டிய போது!


ஒருவரை ஒருவர் சந்திக்காமல்

யாரோ யாருக்கோ செய்த சம்மதத்தால்

அம்மி மிதித்து அக்கினியை வலம்வந்து

அருந்ததி பார்த்தார்கள்


அவர்களைப்போல் -

சம்பந்தமே இல்லாத துருவங்களை, நான்

சந்தித்ததே இல்லை!


தாத்தா சங்கீத ரசிகர், புத்தக புழு

பாட்டிக்கோ படிப்பறிவும் இல்லை, சங்கீதமும் பிடிபடவில்லை

தாத்தா சாப்பாட்டு பிரியர்

பாட்டிக்கு சமையல் கைவந்த கலை

ஆனால் அலுத்துக் கொண்டே அவருக்கு சேவை செய்வாள்

அவளை சீண்டிக் கொண்டே தாத்தா வேடிக்கை பார்ப்பார்


அவரோ கன்னங் கறுத்த தூணைப்போல

இவளோ கண்ணைப் பறிக்கும் தேவதை


அவளுடைய சமையல் திறமையும்

இவருடைய சாப்பாட்டு ரசனையும்தான்

அவர்கள் சந்தித்த ஒரே தளம்!


தாத்தா தூங்கினால் பாட்டிக்கு பிடிக்காது

பாட்டியின் விமர்சனம் தாத்தாவுக்கு ஆகாது!

வேற்றுமையை ஏற்றுகொண்டது மனது

திருமண ஆலோசகர் எல்லாம் அப்போது ஏது?


முன்பின் -

சந்திக்காத ஆணும் பெண்ணும்

அறியாமல்தான் கணவன் மனைவி

ஆனார்கள்

சண்டைகள் சச்சரவுகள் சமாதானங்கள்

மாறி மாறிச் சுற்றிவந்த இன்பதுன்பங்கள்

எத்தனையோ வேறுபாடுகள் நடுவே

என்னென்னவோ இடர்ப்பாடுகளை

இணைந்துநின்றபடிதான் தாண்டிவந்தார்கள்!


அன்று -

திருமணம் என்பது இல்லறத்தின் அவசியம்

இன்று -

இருவர் இணைவது இணைய அவசரம்!


அன்று -

வேறுபட்டவர்கள்தான் இணைந்து வாழ்ந்தார்கள்

இன்று -

இணந்தவர்கள்தான் வேறுபட்டு நிற்கிறார்கள்!


ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொள்ள

ஒருவருக்கும் இங்கே நேரம் இல்லை!

நேசமிருந்தால்தானே நேரம் இருக்கும்?


கண்கள் கலப்பதில்லை காதல் பிறப்பதில்லை

கணவனும் மனைவியும் சந்திப்பதே இல்லை!


பொறுமை இருந்தால் புரிந்துகொள்ளத் தடையேது?

எதிர்பார்ப்பை நீக்கினால் ஏமாற்றம் ஏது?

சகிப்புத் தன்மை சகஜமாய் இருந்தால்

வாதம் ஏது? வழக்கு மன்றம் ஏது?


இவர்களுக்கு

என்னதான் வேண்டுமாம் திருமணத்தில்?

புரியாமல் உழல்கிறார்கள் குழப்பத்தில்

இதயங்கள் இணைந்து விட்டால் வெறுப்புக்கு இடமேது?

அபிமானம் பெருக விட்டால் பிரிவே கிடையாது

இதை -

கற்றா அறிந்தார்கள் நம் முன்னோர்கள்?

அவர்களை -

கண்டும் கற்காவிட்டால் நாம்தானே மூடர்கள்?